’16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை’ பப்ஜிக்கு அடிமையானதால் நேர்ந்த சோகம்!
ஓசூரில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரானா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு, பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் செல்போனிலிருக்கும் பப்ஜி என்ற கேமுக்கு அடிமையாகிவிட்டார்கள் ,பெரியவர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டார்கள். இதனால் பலர் உயிரிழந்து வருவது வேதனையளிக்கிறது.
இந்நிலையில் ஓசூரில் எந்நேரமும் பப்ஜி விளையாடி வந்த பாலிடெக்னிக் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் வாய்பேச முடியாத ஜெயலட்சுமி. இவருக்கு கணவன் இல்லாத நிலையில் இரண்டு மகன்களுடன் வசித்துவருகிறார். இளைய மகன் ரவி(16), இவர் ஓசூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் பப்ஜி விளையாட்டில் அதிக மோகம் கொண்ட ரவி எந்நேரமும் கைப்பேசியில் பப்ஜி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. தாய் ஜெயலட்சுமி வேலைக்கு சென்று இன்று மாலை வீடு திரும்பிய நிலையில் ரவி தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாணவனின் உடலை மீட்ட ஓசூர் நகர போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.