ஈரோடு: ஆஞ்சநேயர் கோயிலில் வித்யாரம்பம் கோலாகலம் – அரசுப்பள்ளியில் சேர்ந்த மழலைகள்
விஜயதசமியை ஒட்டி, ஈரோடு பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
இந்து தர்ம வித்யா பீடம் அமைப்பின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மூங்கில் முறத்தில் பரப்பிய பச்சரிசியில், மஞ்சள் கிழங்கு எழுத்தாணி கொண்டு, தமிழ் உயிரெழுத்தான, அ, ஆ என குழந்தைகள் கையை பிடித்து எழுத பழக்கினர்.
தொடர்ந்து, குழந்தைகளின் நாவில் ஓம் என எழுதி தேனை தடவினர். கல்வி பழகிய குழந்தைகளுக்கு கோவில் குருஸ்வாமி, பென்சில், கரும்பலகை ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினார். அதேபோல், விஜயதசமியையொட்டி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் மழலைகள் சேர்த்து கொள்ளப்பட்டனர்.
இதனையொட்டி, பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளை பள்ளியில் ஆர்வமுடன் சேர்த்தனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசு பொருட்களும், இனிப்புகளும் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.