வேலூர்: விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய ஆட்சியர் – குவியும் பாராட்டு
Oct 16, 2020, 16:51 IST1602847304000
வேலூரில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்த மாவட்ட ஆட்சியரின் செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டுதலை பெற்றுள்ளது. வேலூர் புதிய பேருந்து நிலைய மேம்பாலம் அருகில் ஆறுவழி நெடுஞ்சாலையில் சென்ற காரின் முன்பக்க சக்கரம் திடீரென கழன்றதில், அந்த கார் சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்,உடனடியாக விபத்துக்குள்ளான வாகனத்தை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நிமிர்த்தி அதிலிருந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணை மீட்டார். பின்னர் இருவருக்கும் முதல் உதவி செய்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். ஆட்சியர் சண்முகசுந்தரத்தின் இந்த மனிதநேய செயலை கண்ட பொதுமக்கள் அவருக்கு வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.