`வேலையை இழந்த தந்தை; 15 வயதில் குடும்ப பாரத்தை சுமந்த மகன்!’- 6வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

 

`வேலையை இழந்த தந்தை; 15 வயதில் குடும்ப பாரத்தை சுமந்த மகன்!’- 6வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

ஊரடங்கால் வேலையை இழந்த தந்தைக்கு உதவியாக டீ விற்பனை செய்து வந்த 15 வயது மகன் 6வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் சென்னையை அடுத்த மண்ணடியில் நடந்துள்ளது.

சென்னை மண்ணடி மூர்தெருவில் வசித்து வருபவர் சாகிர் ஹசன். கார் டிரைவர். இவருடைய மகன் ரியாஸ்(வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா வைரஸ் ஊரடங்கால் கார் சரிவர ஓட்டமுடியாமல் போனதால் போதிய வருமானம் இன்றி சாகிர்ஹசன் குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். தற்போது பள்ளி விடுமுறையில் வீட்டில் இருந்து வரும் அவருடைய மகன் ரியாஸ், குடும்ப கஷ்டம் காரணமாக தந்தைக்கு உதவியாக வீட்டில் டீ தயாரித்து கேன்களில் வைத்து கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.

நேற்று ரியாஸ், மண்ணடி அரண்மனைகாயர் தெருவில் புதிதாக கட்டி வரும் 6 மாடி கட்டிடத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் டீ விற்க அந்த கட்டிடத்தின் 5-வது மாடிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவன் ரியாஸ், 5-வது மாடியில் இருந்து நிலைதடுமாறி ‘லிப்டு’ அமைப்பதற்காக கட்டி இருந்த இடைவெளி வழியாக கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரியாஸ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

`வேலையை இழந்த தந்தை; 15 வயதில் குடும்ப பாரத்தை சுமந்த மகன்!’- 6வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த எஸ்பிளனேடு காவல்துறையினர், பலியான மாணவன் ரியாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த கட்டிட உரிமையாளரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனை இழந்த சாகிர் ஹசன் கூறுகையில், “நான் கார் டிரைவராக இருக்கிறேன். கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஊரடங்கால் வருமானம் இல்லாமல் போய்விட்டது. இதனால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டேன். இதனால், டீ போட்டு விற்பனை செய்து வந்தேன். எனக்கு துணையாக எனது மகன் ரிகாஸ் இருந்து வந்தான். மண்ணடியில் கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு டீ கொடுப்பதற்காக சென்றான் ரிகாஸ். 6வது மாடியில் சென்றபோது பிள்ளை தவறி கீழே விழுந்துவிட்டு இறந்துவிட்டான். மகனுடைய இழப்பை என்னால் தாங்க முடியவில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார்.