இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டில் விசைத்தறி உற்பத்தி குறைப்பு; 15 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

 

இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டில் விசைத்தறி உற்பத்தி குறைப்பு; 15 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

ஈரோடு

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கு காரணமாக விசைத்தறி உற்பத்தி குறைக்கப் பட்டதால், 15 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் காலை, இரவு என 2 ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து, ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த 15 நாட்களாக வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.100 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

இரவு நேர ஊரடங்கால் ஈரோட்டில் விசைத்தறி உற்பத்தி குறைப்பு; 15 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று முதல் இரவுநேர ஊரடங்கு பிறப்பித்து உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் காலை நேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவுநேர ஷிட்டு இயக்கப்படவில்லை.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில், இனி 12 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் மட்டுமே உற்பத்தி ஆகும். இதன் மூலம் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.