’15 கிலோ கஞ்சா கடத்தல்’ சென்னையில் மாமனார், மருமகள் கைது!

 

’15 கிலோ கஞ்சா கடத்தல்’ சென்னையில் மாமனார், மருமகள் கைது!

சென்னை அருகே கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுபட்ட மாமனார் மற்றும் மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் மீண்டும் தலைதூக்கி வரும் நிலையில், கஞ்சா வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையை அடுத்த திருநின்றவூரில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

’15 கிலோ கஞ்சா கடத்தல்’ சென்னையில் மாமனார், மருமகள் கைது!

அந்த தகவலின் பேரில் கஞ்சா கடத்துபவர்களை பிடிக்க பட்டாபிராம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்த போலீசார், அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் வசித்து வரும் கண்ணையன் மற்றும் கனகா ஆகியோர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கனகாவின் மாமனார் கண்ணையன் என்றும் இருவரும் சேர்ந்து கஞ்சா கடத்தி, சப்ளை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.