14 தங்க பதக்கங்களை வென்ற விவசாயி மகன்!
ஒரு விவசாயி மகன் 14 தங்க பதக்கங்களை பெற்று சாதித்திருப்பதை அவர் பிறந்த மாவட்டமே கொண்டாடி வருகிறது.
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுக்கா குனூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது இரண்டாவது மகன் பிரசாந்த். இவர் மைசூருவில் உள்ள தோட்டக்கலைத் துறை கல்லூரியில் பிஎஸ்சி தோட்டக்கலைத்துறை இறுதி ஆண்டு படித்து வந்தார். அனைத்து தேர்விலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார் பிரசாந்த்.
இதைப் பாராட்டி அவருக்கு பாகல்கோட்டையில் உள்ள தோட்டக்கலைத்துறை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஒரு விவசாயி மகன் 14 தங்கப் பதக்கங்களை பெற்றது பெருமிதமாக பேசப்பட்டது.
பிரசாந்தின் இந்த சாதனையை அவரது கிராமம் என்றில்லாமல், மாவட்டமே கொண்டாடித் தீர்த்து வருகிறது.
இது குறித்து பிரசாந்த், ’’என் குடும்பம் விவசாயக் குடும்பம். நானும் விவசாயத்தில் சாதிக்க விரும்பினேன். விவசாயத்தில் பலரும் ஒரே பயிரை சாகுபடி செய்து சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் விவசாயி விஞ்ஞானியாக மாற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காகத்தான் இந்த படிப்பை நான் தேர்ந்தெடுத்து படித்தேன். அதன்படியே என் லட்சியத்தை விரைவில் அடைவேன். என் படிப்புக்காக பெற்றோர் வாங்கிய கடனை அடைப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.