கொந்தளித்த திரையுலகம்: வருத்தம் தெரிவித்த டைரக்டர்
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு, ‘இரண்டாம் குத்து’ என்று டைட்டிலியே ஆபாசத்தை காட்டிய இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வாழைப்பழங்களை வைத்து குறியீடாக வைத்திருந்தது பெரும் சலசலப்பை ஏற்படு்த்தியது. இதையடுத்து வந்த டீசரில், வாழைப்பழத்தை சாப்பிடும் பெண் காட்சியை வைத்து மேலும் சலசலப்பை கூட்டினார். பல குட்டிகளை போட்டவனோட கதை என்றும், சரக்கா இருந்தாலும் கையா இருந்தாலும் அளவோட அடிச்சா பிரச்சனை இல்லன்னு டையலாக் வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.
இதையெல்லாம் கண்டு திரையுலகினரே திட்டித்தீர்த்து வந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா, இந்த படத்தின் டைட்டிலையும், போஸ்டரையும் பார்க்கவே கண்கள் கூசுகின்றன என்று கடுமையாக சாடினார். திரையுலகின் மூத்த கலைஞர் என்கிற முறையில் கண்டிக்கிறேன் என்றும் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
உடனே, பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை டுவிட்டரில் பதிவிட்டு, இதை பார்த்தபோது கண்கள் கூசவில்லையா என்று கேட்டிருந்தார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.
சந்தோஷின் இந்த டுவிட் கண்டு கொந்தளித்தது தி்ரையுலகம். ஒரு ஆபாச படத்தை கண்டித்ததற்காக அவரையே எதிர்ப்பதா? என்று ஆவேசமானார்கள். டிக் டிக் டிக் படத்தில் அப்படி என்ன ஆபாசம் கண்டு விட்டீர் என்று கேள்வி எழுப்பி சந்தோசை திணறடித்தார்கள்.
இந்த நிலையில், பாரதிராஜாவுக்கு எதிர்வினை ஆற்றியது தவறு என்று இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், ‘இரண்டாம் குத்து’ படத்தை இயக்கி நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கனத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா, அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது.
இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்’’என்று தெரிவித்திருக்கிறார்.