இளைஞரை அடித்துக்கொன்ற வழக்கில் காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு! தொடரும் சாத்தான்குள அதிர்ச்சி!

 

இளைஞரை அடித்துக்கொன்ற வழக்கில் காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு! தொடரும் சாத்தான்குள அதிர்ச்சி!

தந்தை – மகனை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வரும் நிலையில், இளைஞரை அடித்துகொல்லப்பட்ட சம்பவத்தில் மீண்டும் ஒரு காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சாத்தான்குளம் அடுத்த சொக்கன்குடியிருப்பு வடக்கு தெருவைச் சேர்ந்த எலிசபெத்துக்கு செல்வன், ராஜன், ராஜா என மூன்று மகன்கள். இதில், செல்வன் பலத்த காயங்களுடன் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இளைஞரை அடித்துக்கொன்ற வழக்கில் காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு! தொடரும் சாத்தான்குள அதிர்ச்சி!

நில விவகாரத்தில் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலில் அதிமுக பிரமுகர் திருமணவேல்தான் தன் மகனை அடித்துக் கொலை செய்துவிட்டதாக திசையன்விளை காவல்நிலையத்தில் எலிசபெத் புகார் தெரிவித்தார். மேலும், தனது மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த புகார் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு சென்றது. புகாரின் பேரில் அவர், ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் மீது திசையன்விளை காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். 302, 336, 354,107 ஆகிய பிரிவுகளின் கீழ் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் பேரில் ஹரிகிருஷ்ணனிடம் விசாரணை நடந்து வருகிறது. அதிமுக பிரமுகர் திருமணவேல் தலைமறைவாகி விட்டதால் அவரை தேடி வருகின்றனர்.

அதிமுக பிரமுகருக்கு ஆதரவாக செயல்பட்டு, விசாரணை என்ற பெயரில் இளைஞரை அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.