அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை: ஈரோடு எஸ்பி.,யிடம் புகார்

 

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை: ஈரோடு எஸ்பி.,யிடம் புகார்

ஈரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு, போலி நியமன ஆணை தயாரித்து வழங்கிய மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஈரோடு எஸ்பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு கொல்லம்பாளையத்தில் ரயில்வே காலனி அரசு மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் தலைமையாசிரியையிடம், கடந்த 1ம் தேதி ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த சதீஸ்குமார்(29) என்பவர், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தன்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நியமித்துள்ளதாக கூறி, பணி ஆணையை வழங்கியுள்ளார்.

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை: ஈரோடு எஸ்பி.,யிடம் புகார்

அந்த பணி ஆணையில் அரசு துறைகளில் வழங்குவதை போலவே ஊதிய குழு பரிந்துரையின் படி ஊதிய விவரம், முகவரி, முதன்மை கல்வி அலுவலர் கையெழுத்து, கண்காணிப்பாளர் கையெழுத்து, சீல் போன்றவை இருந்தது. ஆனால், முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்து மட்டும் மாற்றம் இருந்ததால், உஷாரான தலைமையாசிரியை உடனடியாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பணி ஆணை குறித்து விவரம் கூறினார். ஆனால், அதிகாரிகள் அதுபோன்ற பணி ஆணை இந்த ஆண்டில் யாருக்கும் வழங்கவில்லை என கூறியதால், தலைமையாசிரியை அதிர்ச்சி அடைந்து, அவரை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடா்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்த பணி ஆணையை வாங்கி ஆய்வு செய்தபோது, அது போலியான பணி நியமன ஆணை என்பது உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், சதீஸ்குமார் கூறுகையில், ஈரோட்டை சேர்ந்த ஒரு மர்மநபர், ரயில்வே காலனி அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளதாகவும், அதற்கு ரூ.7லட்சம் பணம் கொடுத்தால் பணி ஆணை வழங்குவதாக கூறியதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.3லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள பணத்தை வேலை கிடைத்ததும் வழங்கினால் போதும் என கூறியதாகவும், இதனால், சதீஸ்குமார் அவரது பெற்றோர் மூலம் அந்த மர்மநபருக்கு ரூ.3லட்சம் பணம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதன்பேரில், அந்த மர்ம ஆசாமி, அவராகவே பணி ஆணை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்திட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி பாலமுரளி, ஈரோடு எஸ்பி., தங்கதுரையிடம் நேரடியாக புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், போலி பணி நியமன ஆணை வழங்கிய சதீஸ்குமாரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை போலி நியமன ஆணை வழங்கிய சம்மந்தப்பட்ட நபர் யார்?, ஆளும் கட்சி பிரமுகரா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வாய் திறக்க மறுக்கின்றனர். இதனால், போலி பணி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.