மதுரையில் 12 வயது சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை செய்த வாலிபர் கைது!
மதுரையில் 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரடிபட்டியை சேர்ந்தவர் காசி (27) டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் அவரை கடத்தி சென்றுள்ளார். கீழக்குயில்குடி மலைப் பகுதிக்கு அந்த சிறுமியை அழைத்து சென்றுள்ளார். இதனை பார்த்த சிறுமியின் சகோதரர், இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினரோடு விரைந்து சென்றனர். மலைப்பகுதியில் சிறுமியிடம் அத்துமீறிய காசியை பிடித்த பொதுமக்கள் அவரை மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காசியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.