கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு!
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த யோகேஷ்வரன் நேற்று, திண்டுக்கல் என்.எஸ்.நகரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை யோகேஷ்வரன் தனது உறவினர்களுடன் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிக்க சென்றிருந்தார். கிணற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால் சிறுவனை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் உயிரிழந்த நிலையில் யோகேஷ்வரனை சடலமாக மீட்டனர். தொடர்ந்து தாடிகொம்பு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.