டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி 100 பெண்கள் போராட்டம்!

 

டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி 100 பெண்கள் போராட்டம்!

டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி ஊருக்கு ஊர் பெண்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கோட்டூரில் டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் கிராமத்தில் முள்ளிஆறு -அடப்பாறு அருகே தனியார் இடத்தில், அரசு டாஸ்மாக்கிற்கு வாடகைக்கு விடுவதற்காகவே கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அக்கட்டிடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி அரசு மதுக்கடை திறக்க போவதாக இருந்தது. அந்த வழியாகத்தான் கோமாளப்பேட்டை, தெற்குத்தெரு, மேலப்பனையூர், கருப்பகிளார் போன்ற கிராமங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும். அது மக்கள் செல்லும் பாதை என்பதாலும், அந்த கட்டிடத்திற்கு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவியர் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தீயணைப்பு துறை அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதாலும் அங்கே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு எழுந்தது. கடையை திறக்க கூடாது என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் போராட்டம் நடந்தது எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பின்னர் அங்கே டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் இருந்தது.

ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் கடையை திறப்பதிலேயே குறியாக இருந்தனர்.

டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி 100 பெண்கள் போராட்டம்!

இதற்கிடையில் கோட்டூரில் அரசு டாஸ்மாக் கடை இல்லாததால் கள்ள மார்க்கெட்டில் தெருவிற்கு தெரு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் கோவில்களின் பின்புறம், பள்ளிகட்டிடங்களின் அருகில் மதுபான விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனை தடுத்திட கோட்டீரில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் அரசு மதுபானக்கடையை திறக்க வலியுறுத்தி இன்று(1.8.2020) போராட்டம் நடைப்பெற்றது. எம்.துரைராஜன் தலைமையிலும், எம்.ராஜேந்திரன், எஸ்.வைத்திலிங்கம் முன்னிலையிலும் கோட்டூர் கடைவீதியில் நடந்த இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்களும், 100க்கும் மேற்பட்ட ஆண்களும் பங்கேற்றனர்.

முன்னதாக இப்போராட்டம் குறித்து கடந்த வாரத்திலேயே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.