10 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்
கடந்த 4 மாதங்களாக இந்தியாவை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா நோய்த் தொற்று. மத்திய, மாநில அரசுகள் என்னவிதமான எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
ஆனால், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதேபோல, இறப்போர் சதவிகிதம் தினமும் குறைந்துவருகிறது. இவையெல்லாம் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான ஆறுதலான செய்திகள்.
இந்தியாவில் கோவிட்-19 பாதித்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சம் எனும் பெரும் எண்ணிக்கையைக் கடந்துள்ளது.
டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் முன்களத்தில் நின்று பணியாற்றும் சுகாதார அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றுவது மற்றும் தன்னலமற்ற தியாகத்தின் பலனாகத் தான் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது.
குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் ஒரு லட்சத்தைத் தொட்ட நிலையில், இப்போது அது 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
தரநிலைப் படுத்திய சிகிச்சை மேலாண்மை நடைமுறைகள் காரணமாக, தொடர்ந்து ஏழாவது நாளாக தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் பெற்று வருகின்றனர். ஜூலை முதல் வாரத்தில் தினமும் குணம் அடைவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தது. கடந்த வாரத்தில் இது தினமும் 35 ஆயிரம் என்ற நிலைக்கு உயர்ந்தது.
ஜூலை 31 காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 32,553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், இந்த நோயால் பாதித்தவர்களில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10,20,582 ஆக உயர்ந்துள்ளது. கோவிட் பாதித்தவர்களில் குணம் அடைவோரின் விகிதாச்சாரம் 64.44 சதவீதம் என உள்ளது.
குணம் அடைந்தவர்கள் மற்றும் கோவிட் பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளி 4,92,340 ஆக உள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைவிட, குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.9 மடங்கு அதிகமாக உள்ளது. (தற்போது மருத்துவ கண்காணிப்பில் 5,28,242 பேர் உள்ளனர்).
குணம் அடைவோர் எண்ணிக்கையைப் பொருத்த வரையில் தேசிய சராசரியைவிட 16 மாநில / யூனியன் பிரதேசங்களின் சராசரி அதிகமாக உள்ளது என்பதன் மூலம் இதன் வெற்றியை அறிய முடியும்.
மருத்துவமனைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், அரசு மற்றும் தனியார் துறையினரின் முயற்சிகளை ஒருங்கிணைத்த காரணத்தால், கோவிட்-19 நோய் பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டது. அதனால் மரண எண்ணிக்கை குறைவாக உள்ளது.
நோய்த் தொற்று காரணமாக ஏற்படும் மரண விகிதம் இந்தியாவில் குறைந்தபட்ச அளவாக உள்ளது. உலக அளவில் இந்த சராசரி 4 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவின் சராசரி 2.21 சதவீதமாக இருக்கிறது. 24 மாநில / யூனியன் பிரதேசங்களில் இது தேசிய சராசரியைவிடக் குறைவாக உள்ளது. 8 மாநில / யூனியன் பிரதேசங்களில் இது 1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது.