போன் பேனல் மீது 10% இறக்குமதி வரி – போன் விலை உயரும் அபாயம் !
ஸ்மார்ட்போன்களில் முக்கிய உதிரிபாகமாக கருதப்படும் தொடுதிரை பேனல்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளது.
இந்த இறக்குமதி வரிவிதிப்பால், இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் அரசின் இந்த முடிவு, பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனையை பாதிக்கும் என கருதப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களில் டச் டிஸ்பிளே பேனல்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுவதால், அதனை உள்நாட்டில் தயாரிக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரலில் உயர்த்தப்பட இருந்த இந்த இறக்குமதி வரி, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க கால அவகாசம் அளிக்கும் வகையில் இந்த வரிவிதிப்பை அரசு தள்ளிப்போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வரிவிதிப்பை அமலுக்கு கொண்டு வருவதற்கு இதுவே சரியான நேரம் என கருதி இந்த வரிவிதிப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த இறக்குமதி வரிவிதிப்பால், ஸ்மார்ட்போன்களின் விலை 1.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயரக்கூடும் என துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- எஸ். முத்துக்குமார்