தெலங்கானாவும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது!
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருதால் நாளை (மே 12) முதல் வரும் 22ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு மாநிலங்கள் திணறிவருகின்றன. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தெலங்கானா மாநிலத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா பரவலை எப்படி கட்டுபடுத்துவது என்பது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வரும் 12ஆம் தேதி முதல் மே 22ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல உலகளாவிய அளவில் கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்துவந்த நிலையில், தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி கடைகள், மளிகை, பால் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணிவரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகாவில் மே 24ஆம் தேதி வரையும், கேரளாவில் மே 16ஆம் வரையும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தென் இந்தியாவில் ஆந்திர மாநிலம் மட்டுமே பகுதி நேர ஊரடங்கை அறிவித்திருக்கிறது. தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.