தமிழ்நாட்டில் 10.4% பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்!
தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இருந்தே தமிழகம் முழுமையாக மீளாத நிலையில் மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். கொரோனாவை வெல்ல ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்பதால் தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்திவருகிறது. தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. அவர்களில் 40 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 10.4 சதவீதம் பேர் இரு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் இன்றுடன் சேர்த்து 50,66,114 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு மையங்களில் 40 லட்சமும், தனியார் மையங்களில் 10 லட்சம் டோசும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 35,63,992 பேர் ஒரு தவணையும், 15,02,122 பேர் 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். சென்னையில் 27,62,013 ஆண்களும், 23,03,309 பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 45 முதல் 60 வயதுக்குட்பட்ட 14,43,416 நபர்களும், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 25,96,048 நபர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
26 மாவட்டங்களில் 10% பேருக்கு குறைவானவர்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளும்,
11 மாவட்டங்களில் 35%க்கும் குறைவானவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 68.5% பேர் முதல் டோசும், 23.2% பேர் இரண்டாம் டோசும் செலுத்தியுள்ளனர். சென்னையில் 47.4% முதல் டோசும், 21.4% இரண்டாம் டோசும் செலுத்தியுள்ளனர். கோவையில் 48.4% பேர் முதல் டோசும் , 13.5% இரண்டாம் டோசும் செலுத்தியுள்ளனர். குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 29.5% முதல் டோசும் , 7.1% இரண்டாம் டோசும் செலுத்தியுள்ளனர்.