‘1 ரூபாய்க்கு சானிடரி நாப்கின்கள்’ : மத்திய அரசின் புதிய திட்டம் !
மக்களின் நலன் கருதி மத்திய அரசு நாடு முழுவதும் மக்கள் நல மருந்தகங்களை மத்திய அரசு திறந்து வருகிறது
மக்களின் நலன் கருதி மத்திய அரசு நாடு முழுவதும் மக்கள் நல மருந்தகங்களை மத்திய அரசு திறந்து வருகிறது. மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு இந்த மருந்தகங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மருந்தகங்களில் விற்கப்படும் பெரும்பாலான மருந்துகள் பிரபல நிறுவனங்களின் விலையை விட 50 முதல் 90 சதவீதம் குறைவாகவே இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 500 மக்கள் நல மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெண்கள் நலன் கருதி 1 ரூபாய்க்கு சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய மக்கள் நல மருந்தகங்களின் உரிமையாளர்கள், பெண்களின் நலனுக்காக மத்திய அரசு மிகக் குறைந்த விலையில் நாப்கின்களை விற்க முடிவு செய்து 4 நாப்கின்கள் அடங்கிய பாக்கெட் ரூ.10க்கு விற்கப்பட்டு வந்தது.கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாப்கின் 1 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்ததால், அந்த 4 நாப்கின்களை அடங்கிய பாக்கெட்டுகள் ரூ.4க்கு விற்கப்பட்டு வருகின்றன. தற்போது சில கடைகளில் மட்டும் குறைந்த விலையில் நாப்கின்கள் விற்கப்படுகிறது. கூடிய விரைவில் அனைத்து மக்கள் நல மருந்தகங்களிலும் 1 ரூபாய்க்கு சானிடரி நாப்கின்கள் விற்கப்படும் என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
ஒரு பாக்கெட் சானிடரி நாப்கின் கடைகளில் ரூ.30 முதல் ரூ.100க்கும் மேல் விற்கப்படுகிறது. அதனால், மலிவு விலையில் நாப்கின்கள் வழங்கும் இத்திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.