ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் கொலை! சில்குர் பாலாஜி கோயிலில் 20 நிமிடங்கள் தரிசனம் ரத்து….

 

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் கொலை! சில்குர் பாலாஜி கோயிலில் 20 நிமிடங்கள் தரிசனம் ரத்து….

நாட்டை உலுக்கிய ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சில்குர் பாலாஜி கோயிலில் நேற்று 20 நிமிடங்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்கா ரெட்டி பாலியல் கொலையை கண்டித்து தெலங்கானா மற்றும் நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண் டாக்டர் கொலைக்கு எதிர்ப்பு

பிரியங்கா ரெட்டியின் பாலியல் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நேற்று பிரபலமான சில்குர் பாலாஜி கோயிலில் 20 நிமிடங்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோயில் நடைசாத்தப்பட்டதையடுத்து தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் கோயிலில் வேலை பார்க்கும் பூஜாரிகள் கோயிலுக்கு வெளியே நின்றனர். மேலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக மகா ப்ரதஷிணம் வழிபாடு நடைபெற்றது.

சில்குர் கோயில் வெளிப்பகுதியில் பக்தர்கள்

தெலங்கான கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி ஆகியோர், பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த பிரியங்கா ரெட்டி கொலை தொடர்பாக இதுவரை போலீசார் 4 டிரைவர்களை கைது செய்துள்ளனர்.