ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதியால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது… மத்திய அரசு உறுதி

 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதியால் உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படாது… மத்திய அரசு உறுதி

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் அந்த மருந்துக்கு தட்டுபாடு ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்து இருந்தது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் உருவான சீனாவை காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தி பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்ததாக தெரிகிறது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து

இதனையடுத்து, அமெரிக்க நிறுவனங்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான ஆர்டரை இந்தியா அனுப்பாததால், அந்த மருந்தை உடனே அனுப்புமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து மத்திய அரசு நேற்று முன்தினம், கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய தற்காலிகமாக அனுமதி வழங்கியது. இதனால் உள்நாட்டில் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் ஏற்பட்டது. 

லாவ் அகர்வால்

ஆனால் இப்பம் மட்டுமல்ல எப்போதுமே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய அரசு தகவல் தெரிவித்தது. மத்திய சுகாதார துறை இணை செயலர்  லாவ் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று மட்டுமல்ல எதிர்காலத்திலும் மற்றும் தேவைப்படும்போது உள்நாட்டில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுபாடு ஏற்படாது என்பதை மத்திய அரசு உறுதிசெய்துள்ளது என தெரிவித்தார்.