ஹெல்மெட் அணியவில்லை என்றால் டபுள் மடங்கு அபராதம்! ஒரு வாரத்தில் அமல்படுத்த உத்தரவு!!

 

ஹெல்மெட் அணியவில்லை என்றால் டபுள் மடங்கு அபராதம்! ஒரு வாரத்தில் அமல்படுத்த உத்தரவு!!

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை  அதிகரிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒருவாரத்தில் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை  அதிகரிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒருவாரத்தில் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்தக்கோரி   சென்னையை சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மோட்டார் வாகன சட்ட விதி மீறல் குறித்து புகார் அளிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும்  அதன் மூலம் இதுவரை 96 புகார்கள் பெறப்பட்டுள்ளளதாக தெரிவித்தார். மேலும் சாலை பாதுகாப்புக்காக 2000 முதல் 2019 வரை 605.55 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2018-ல் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எதிராக 14 லட்சத்து 6 ஆயிரத்து 491 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சீட் பெல்ட் அணியாததற்காக 39 லட்சத்து 2 பேருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தற்போது உடனடி அபராதம் வசூலிக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த 2 வார அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இந்த கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை வரும் ஜூன் 21க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட அனைத்து  காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டும் எனவும், உடனடி அபராதத்தொகையை அதிகரிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒருவாரத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.