ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: சங்கேத வார்த்தைகளில் விளையாடும் இடைத்தரகர்; பாஜக மீது காங்.,குற்றச்சாட்டு

 

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: சங்கேத வார்த்தைகளில் விளையாடும் இடைத்தரகர்; பாஜக  மீது காங்.,குற்றச்சாட்டு

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தின் போது, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபி-க்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், இதில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் கைது செய்யப்பட்டு இம்மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, இந்த காவல் 9 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் காவல் முடிந்து நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது காவலை நீட்டிக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அத்துடன், அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சில தகவல்களை தெரிவித்தனர். அதன்படி, விசாரணையின்போது, கிறிஸ்டியன் மைக்கேல் சோனியா காந்தியின் பெயரை கூறியதாகவும், Son Of Italian Lady (இத்தாலிய பெண்ணின் மகன்) என்ற வார்த்தையை அவர் உபயோகப்படுத்தினார். அவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் என ராகுலின் பெயரை கிறிஸ்டியன் மைக்கேல் மறைமுகமாக குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘R’ என்கிற சங்கேத வார்த்தையைக் குறிப்பிட்டு கிறிஸ்டியன் மைக்கேல் மற்றவர்களுடன் உரையாடியுள்ளார். அவரது வழக்கறிஞர்களிடம்  துண்டு பேப்பரை ரசகியமாக பரிமாறிக் கொண்டார். அதிலும் சோனியாவின் பெயர் இருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தினை அவர் தவறாக பயன்படுத்தினார் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

 இதனைத் தொடர்ந்து, 7 நாள்களுக்கு கிறிஸ்டியன் மைக்கேலை அமலாக்கத்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், சிறிது தொலைவில் இருந்துதான் மைக்கேலிடம் உரையாட வேண்டுமென்று அவரின் வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக கிறிஸ்டியன் மைக்கேல், சோனியா பெயரை குறிப்பிடுவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர்.பி.என்.சிங் குற்றம் சாட்டியுள்ளார்.