ஸ்டெர்லைட் பற்றிய ஆவணப்படம்: சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே?

 

ஸ்டெர்லைட் பற்றிய ஆவணப்படம்: சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் எங்கே?

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கடந்த சில நாட்களாக காணவில்லை.

சென்னை: சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனை கடந்த சில நாட்களாக காணவில்லை.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களாக காணவில்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அவர் காணாமல் போனது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அணு உலை எதிர்ப்புப் போராட்டம், ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களில் பங்கெடுத்தவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன். அவரை கடந்த 16 ஆம் தேதி முதல் காணவில்லை, யாருடைய தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்.

பிப்ரவரி 15 ஆம் தேதி, காலை 11:00 மணி அளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில், “கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?” என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார் முகிலன். ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு பற்றிய உண்மையை இது அம்பலப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இதை வெளியிடுவதால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதையும் அந்த சந்திப்பிலேயே முகிலன் கூறியிருந்தார். இந்நிலையில் 16 ஆம் தேதி அதிகாலை முதல் அவரை காணவில்லை.தமிழக காவல்துறையே முகிலனை சட்ட விரோதமாக கைது செய்து வைத்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு கூடங்குளம் பிரச்சனையின் போதும் முகிலனை காவல்துறையில் சட்டவிரோதமாக கடத்தியது குறிப்பிடத்தக்கது.

முகிலன் மாயமானதுக்கு பத்திரிகையாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். முகிலன் எங்கே என்ற ஹாஷ்டேக்கில் பலரும் இதுகுறித்து எழுதுகிறார்கள். அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு, இன்று மதியம் 3:00 மணி அளவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.