ஸ்டெர்லைட் ஆலையை மூடிய வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

 

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரும் வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக, தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆலை நிரந்தரமாக மூடும் சூழல் உருவாகும். இல்லையெனில், ஸ்டெர்லைட் நிர்வாகம் தீர்ப்பு ஆயத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முறையீடு செய்து அனுமதி பெற வாய்ப்புள்ளது என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலை மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலையின்றி தவிப்பதாகவும், இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கானது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இடைக்கால நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.