வைரமுத்து கண்ணியமானவர்: நடிகை குஷ்பு சர்டிஃபிகேட்

 

வைரமுத்து கண்ணியமானவர்: நடிகை குஷ்பு சர்டிஃபிகேட்

நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களுள் வைரமுத்து மிகவும் கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்

சென்னை: நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களுள் வைரமுத்து மிகவும் கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

அந்த வகையில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவின் மீதும் #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

தனக்கு 18 வயது இருக்கும்போது  பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், பின்னனி பாடகி சின்மயியும் வைரமுத்து மீது மீ டூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா அரங்கிலும், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, “நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களுள் வைரமுத்து மிகவும் கண்ணியமானவர்” என தெரிவித்துள்ளார். நாளை (20/10/2018) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், குஷ்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்.