வைகோ மீது கோபமாக இருக்கிறார் ஸ்டாலின்: புது புரளி கிளப்பும் தம்பிதுரை

 

வைகோ மீது கோபமாக இருக்கிறார் ஸ்டாலின்:  புது புரளி கிளப்பும் தம்பிதுரை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது மு.க,ஸ்டாலின் கோபத்தில் இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கரூர்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது மு.க,ஸ்டாலின் கோபத்தில் இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

திமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபகாலமாக திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும் ஸ்டாலினை முதல்வராக்காமல் விடமாட்டேன் எனவும் கூறி வருகிறார். வைகோவின் இந்த நிலைப்பாடு தேர்தலில் எந்த அளவு பிரதிபலிக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ மூன்றாவது அணி அமைத்ததால்தான் திமுகவின் வெற்றி பறிபோனது என்ற வருத்தத்தில் திமுகவினர் இருப்பதாகவும், அவர்கள் வைகோவை விரும்பவில்லை என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி பலிக்கும் என சொல்லும் இதே வைகோ, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற தேர்தல் உடன்பாடு செய்தார். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான காங்கிரஸ் ஒழிய வேண்டும் என கடுமையாக சாடினார். மோடி வெற்றி பெறுவதற்கு வைகோவும் காரணம் அல்லவா? இதை மறுக்க முடியுமா?

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்பதற்கும் வைகோ காரணம்தானே. 3-வது அணி அமைத்ததால் ஓட்டு பிரிந்து வெற்றி வாய்ப்பு பறிபோனதாக திமுக-வினரே குற்றம் சாட்டினார்கள். இதனால் இப்போதும் வைகோ மீது மு.க.ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார். ஆனால் வெளியே காண்பிக்கவில்லை. நிச்சயம் அதையெல்லாம் காண்பிப்பார் என்றார்.

ஆனால் வைகோ மீது ஸ்டாலின் எந்த கோபத்திலும் இல்லை. இருவரையும் பிரிப்பதற்காக தம்பிதுரை பார்க்கும் சூழ்ச்சி வேலைக்கு செவிமடுக்க தேவையில்லை என்கின்றனர் மதிமுகவினரும், திமுகவினரும்.