வைகோ கோபம் யார் மீது? – திருமாவளவன் கேள்வி… கூட்டணியில் அடுத்த புகைச்சல் ஆரம்பம்?

 

வைகோ கோபம் யார் மீது? – திருமாவளவன் கேள்வி… கூட்டணியில் அடுத்த புகைச்சல் ஆரம்பம்?

விசிக – மதிமுக இடையே தற்போது இருப்பது சிறிய மனக்கசப்புதான். இதனை வளரவிடாமல் இரு தரப்புக்கும் சமரசம் செய்து தன் கூட்டணியில் திமுக நிச்சயம் தக்கவைத்துக்கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நெறியாளர் தலித்துகளுக்கு திராவிட அரசியலில் சரியான அதிகாரப்பகிர்வு கிடைத்துள்ளதா என்ற கேள்வியை முன் வைத்தார். இதனால் கோபமடைந்த வைகோ, எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள். அவர்களோடு நான் சரிசமமாக பழகுகிறேன் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

வைகோவின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் வன்னி அரசு வைகோ விவகாரம் தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில், கடந்த இரு நாள்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்கக்கூடிய தலைவர் அவர். அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது. அந்தத் தலைவர் வைகோதான். தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன்.

திராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார். அதற்கு மிகச் சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், வைகோ அதற்குப் பதில் அளிக்காமல், “தலித்துகளுக்கு எதிராக என்னைக் காட்ட முயற்சி செய்கிறீர்களா? எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள்தான்” என்று சொல்கிறார்.

vanni

இந்த உளவியலை ஓர் ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை? எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா?

இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல தலித்துகளுக்கு வந்ததா? என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள். அந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது.

arasu

இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன – சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளைப் பரப்ப வேண்டிய பணிகளையும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில், கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும் என பதிவிட்டிருந்தார்.

vaikko

இதனையடுத்து மதிமுக நிர்வாகிகளிடம் பேசிய வைகோ, திருமாவளவனுக்கு தேர்தல் செலவுக்காக ரூ.50 லட்சம் கொடுத்தேன். என்னைப் பார்த்து இப்படி பேசியது வருத்தமளிக்கிறது என பேசினார். இதற்கிடையே வன்னி அரசின் பதிவுக்கு எதிர்ப்பு வந்ததால் அவர் தனது பதிவை நீக்கிவிட்டார்.

இந்நிலையில், திருமாவளவன் இதுறித்து பேசுகையில், வைகோ பற்றி வன்னி அரசு பதிவு செய்த கருத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல. வன்னி அரசு சர்ச்சைக்குள்ளான பதிவை நீக்கி விட்டார். தனது வருத்தத்தையும் பதிவு செய்து விட்டார். வைகோவின் கோபம் என் மீதா, இல்லை வன்னிஅரசு மீதா? எதிர்ப்பை நேரடியாக பதிவு செய்வதை தவிர நான் யாரையும் தூண்டி விடுவதில்லை என்றார்.

thiruma

ஏற்கனவே துரைமுருகன் அளித்த பேட்டியால் திமுக – மதிமுக – விசிக உறவில் விரிசல் விழுந்துவிட்டதோ என பரவலாக பேச்சு எழுந்த சூழலில், மு.க.ஸ்டாலின் வைகோவையும், திருமாவளவனையும் அழைத்து பேசி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது வைகோ – வன்னி அரசு மோதலால் விசிக – மதிமுக உறவில் விரிசல் விழுந்து திமுகவுடன் இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்வதில் சிக்கல் வருமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பலர் கூறி வருகின்றனர்.

stali

ஆனால் விசிக – மதிமுக இடையே தற்போது இருப்பது சிறிய மனக்கசப்புதான். இதனை வளரவிடாமல் இரு தரப்புக்கும் சமரசம் செய்து தன் கூட்டணியில் திமுக நிச்சயம் தக்கவைத்துக்கொள்ளும் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கூட்டணி அமைவதற்கு முன்னரே இவ்வளவு மோதல்கள் வருகின்றன. கூட்டணி அமைந்து தொகுதி பங்கீட்டில் மேலும் என்னென்ன மோதல் வருமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.