வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நாளை தேர்பவனி விழா

 

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நாளை தேர்பவனி விழா

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை ஆண்டுப் பெருவிழா தேர்பவனி நடைபெறுகிறது.

தேர் பவனி

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது.இந்த பேராலயம் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகர் என்றழைக்கப்படுகிறது.பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஐந்து கிறிஸ்தவ கோவில்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்றாகும்.

புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி முடிய 11 நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேளாங்கண்ணி

 

அதனையடுத்து விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெறும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விழா நாட்களில் தினந்தோறும் ஆலய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்படும். அதன்படி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய திருத்தேர்பவனி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. 

இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ்தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர்.

வேளாங்கண்ணி மாதா

 

இந்த தேர்பவனி மற்றும் அன்னையின் பிறந்த நாள் விழாவினை காண்பதற்காக சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி,புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும்,வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா சொரூபம் வைத்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துகொண்டு பாதையாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.