வேலூர் மக்களவைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கும் பெண் வேட்பாளர்!
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் உள்பட 24 பேர் வேட்பாளர்களாகக் களத்திலிருந்தனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் உள்பட 24 பேர் வேட்பாளர்களாகக் களத்திலிருந்தனர். இதையடுத்து வேலூர் தொகுதியில் கட்டுக்கடங்காத பணப்புழக்கம் காரணமாக வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பாக, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் 19 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற 22 ஆம் தேதி கடைசி நாள் என்றும் வாக்குப் பதிவு முடிந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் அறிவிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நடக்கவிருக்கிற வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கானத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அன்புத்தங்கை தீபலட்சுமி அவர்கள் போட்டியிடுவார்.
நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பரப்புரையில் தங்களது அளப்பெரிய பங்களிப்பைச் செலுத்தி நமது வெற்றிக்கு உழைக்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் pic.twitter.com/263BmSTYqU
— சீமான் (@SeemanOfficial) July 8, 2019
இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகக் கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே போல் வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஏற்கனவே போட்டியிடுவதாக அறிவித்த புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது