வேலூரில் கனமழை: சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு!
சாண எருவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: சாண எருவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, ஊட்டல் பகுதிகளில் கானாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பேர்ணாம்பட் அருகே சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் வெள்ளநீர் புகுந்ததில் அங்கிருந்த 6500 கோழிகள் பலியாகின.
இந்நிலையில் ஒடுக்கத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கொல்லைமேடு பகுதியில் வசிக்கும் வேலு என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சாண எருவுக்கான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அதில் வேலுவின் இரண்டு குழந்தைகளான பிரித்திகா, ஹரிணி ஆகிய இருவரும் மூழ்கி பலியாகியுள்ளனர். இதே போல் வாணியம்பாடியில் அன்வர் பாஷா என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து அவரது தாய் மற்றும் 3 மகள்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.