‘வேண்டாம் CAA, NRC’ – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம்!
அனுமதியின்றி கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் முக ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம் போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிகள் கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எழுத்துக்களுடன் அங்குள்ள வீடுகள் மற்றும் சாலையில் கோலம் போட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அனுமதியின்றி கோலம் போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதை தொடர்ந்து பலரும் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
#NRC_CAA_Protests எங்கள் இல்லத்தில்.. pic.twitter.com/e7nZ13YLPZ
— M.K.Stalin (@mkstalin) December 30, 2019
இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வசிக்கும் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டுவாசலில் இன்று காலை வேண்டாம் CAA, NRC என கோலம் போடப்பட்டிருந்தது. அதேபோல் கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டிலும், திமுக எம்பி கனிமொழி வீட்டிலும் வேண்டாம் CAA, NRC என கோலம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.