வெளிநாட்டு தூதர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை கட்சியை விட்டு நீக்கிய மெகபூபா முப்தி….

 

வெளிநாட்டு தூதர்களை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை கட்சியை விட்டு நீக்கிய மெகபூபா முப்தி….

காஷ்மீரின் உண்மை நிலவரத்தை அறிய அங்கு சென்றுள்ள வெளிநாட்டு தூதர்களை சந்தித்து பேசிய தனது கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரை மெகபூபா முப்தி கட்சியிலிருந்து நீக்கினார்.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், உண்மை நிலவரத்தை அறியவும் 2 நாள் பயணமாக 15 நாடுகளை சேர்ந்த தூதர்கள் நேற்று அங்கு சென்றனர். பல்வேறு தரப்பினரையும் அவர்கள் சந்தித்து பேசினர். அப்போது மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் வெளிநாட்டு தூதர்களை சந்தித்து பேசினர்.

வெளிநாட்டு தூதர்கள் காஷ்மீர் வருகை

இது மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்திக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த 8 பேரையும கட்சியிலிருந்து நீக்கினார். இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் விருப்பத்துக்கு எதிராக செல்வதால் வெளிநாட்டு தூதர்களை சந்தித்த 8 பேரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தூதர்களுடன் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

நீக்கப்பட்ட 8 பேரில் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான முசாபர் ஹூசைன் பேக்கும் ஒருவர். அவர் நேற்று செய்தியாளர்களுடான சந்திப்பின்போது,  சட்டப்பிரிவு 370 சிதைக்கப்பட்டால் ஜம்மு அண்டு காஷ்மீரில் மூவர்ணத்தை வைத்திருக்க யாரும் விட மாட்டார்கள் என மெகபூபா முப்தியின் கருத்துதான்  மாநிலத்தின் பிளவுக்கு காரணமாக இருந்தது என குற்றச்சாட்டினார்.