வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடி.. திடீரென வெடித்துச் சிதறியதில் தாய், மகள் பலி!
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவில் வசித்து வரும் பாண்டியம்மாள்(45) என்பவரின் மகள் நிவிதா(18)
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வரதப்பர் தெருவில் வசித்து வரும் பாண்டியம்மாள்(45) என்பவரின் மகள் நிவிதா(18). பாண்டியம்மாளின் கணவர் கோபி விசேஷ நாட்களில் வெடி தயாரித்து விற்பனை செய்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னாள் அவர் உயிரிழந்தார்.
அதனால் பாண்டியம்மாளும் அவரது மகளும் அந்த தொழிலை செய்து வந்தனர். இன்று அவர்கள் வழக்கம் போல நாட்டு வெடி தயாரித்துக் கொண்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே பாண்டியம்மாள் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற பெரியகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிவிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், நிவிதா செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைவாகச் செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வெடி விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.