வீட்டில் மூங்கில் வளர்த்தால் இத்தனை நன்மைகளா? உலக மூங்கில் தினம்
பிற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) எடுத்துக் கொண்டு, அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்து வருகிற இடம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
மாறி வரும் கால சூழலில் பழமைக்கும், பாரம்பரியத்திற்கும் மனித இனம் திரும்பிக் கொண்டிருக்கிறது. சிறுதானியங்களில் சமைத்த உணவு பொருட்களை உண்டு வந்த போது, நோய்கள் நம்மை அண்டாமல் இருந்தன. அப்போதெல்லாம் அரிசி சோற்றுக்கு ஏங்கி வந்தவர்கள், இப்பொழுது சிறுதானிய உணவுகளைத் தேடிச் செல்கிறார்கள். விரைவாகவும், சுலபமாகவும், கவர்ச்சிகரமாகவும் செய்யப்படுகின்ற வேலைகளில் நேர்த்தி இருக்காது என்பதை மெய்ப்பிப்பதைப் போலவே நாம் பயன்படுத்தி வரும் ஒவ்வொரு விஞ்ஞானப் பொருட்களும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
ஏழைகளின் மரம் என்றும், பச்சைத் தங்கம் என்றும், வனவாசிகளின் வாழ்வாதாரம் என்றும் அழைக்கப்படுகின்ற மூங்கில்களின் தேவையையும், பயன்பாட்டையும் இன்னும் இன்றைய தலைமுறை சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்றே சொல்லலாம். மூங்கிலின் பயன்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கிலேயே இன்று உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது. மழைக்காகவும், ஓசோன் பாதுகாப்புக்காகவும், குளிர்ச்சிக்காகவும் மரம் வளர்க்க நினைப்பவர்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் மூங்கில்களை வளர்க்கலாம்.
ஏனெனில், பிற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிகளவு கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) எடுத்துக் கொண்டு, அதிக அளவிலான பிராண வாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்து வருகிற இடம் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
உலகின் மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூங்கிலின் பயன்பாட்டை அதிகரிக்க நமது மத்திய அரசு தேசிய மூங்கில் இயக்கம் என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது.