வீட்டில் தனியாக இருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி.. கதறித்துடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கண்கலங்க வைக்கும் சம்பவம்!
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ரஞ்சினி 3ஆவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார்.
ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையேயுள்ள நடராஜபுரம் பகுதியில் வசித்து வந்த தம்பதி தேவேந்திரன்- ரஞ்சனி. இவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ரஞ்சினி 3ஆவது முறையாக கர்ப்பமாக இருந்துள்ளார். மீன் பிடிக்கும் தொழில் செய்து வரும் தேவேந்திரன், ஊரடங்கு உத்தரவால் ஒரு மாத காலமாக வீட்டிலேயே இருந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரஞ்சினியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு தேவேந்திரன் மீன் பிடிக்க சென்றுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரஞ்சினிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் ரஞ்சினி தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது ரஞ்சினியின் குழந்தை இறந்த நிலையில் வந்ததால், அதனை ஒரு துணியில் சுற்றி வைத்துள்ளார். பின்னர், அதிக ரத்தப்போக்கால் சோர்வடைந்த அவர், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆள் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த ரஞ்சினியின் மாமனார், ஆம்புலன்ஸை அழைத்து ரஞ்சினியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் ரஞ்சினி ராமேஸ்வரம் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.