வீட்டிலேயே ருசியான இட்லி பொடி செய்வது எப்படி?
Oct 6, 2018, 17:27 IST1538827066000
என்ன தான் இட்லி, தோசைக்கு விதவிதமான சட்னிகளை வைத்துச் சாப்பிட்டாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பிச் சாப்பிடக்கூடியது இட்லி பொடி.
என்ன தான் இட்லி, தோசைக்கு விதவிதமான சட்னிகளை வைத்துச் சாப்பிட்டாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பிச் சாப்பிடக்கூடியது இட்லி பொடி. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை, ஊத்தாப்பம் என இவற்றிக்கு அட்டகாசமான பொருத்தம் இந்த இட்லி பொடி தான். கர்நாடகாவில் இட்லி பொடி தயாரிப்பில் தேங்காய் சேர்ப்பதும், ஆந்திராவில் பூண்டு சேர்ப்பதும் வழக்கம். இந்நிலையில் தமிழ்நாடு இட்லி பொடியை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
- கறுப்பு உளுத்தம் பருப்பு – 1 கப்
- கடலை பருப்பு – ¼ கப்
- காய்ந்த மிளகாய் – 12
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
- கருப்பு எள் – ஒரு டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
- மிதமான சூட்டில் கறுப்பு எள்ளை போட்டு வறுக்கவும். எள் பொரிந்து வெடிக்கும் சமயத்தில் வாணலியை இறக்கி தனியே எடுத்து வைக்கவும். பிறகு அதே வாணலியில் உளுந்தைப் போட்டு வறுக்கவும். உளுந்து வறுபட்ட வாசனை வந்த பின் அடுப்பை சிம்மிலேயே வைத்து கடலை பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த அனைத்துப் பொருட்களையும் நன்கு ஆற வைக்கவும்.
- வறுத்து வைத்துள்ள உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயுடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். இறுதியாக அதில் எள் சேர்த்து நன்கு பொடிந்து போகாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்து காற்று புகாதவாறு ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
- இந்தப் பொடியில் நல்லெண்ணையை விட்டுச் சாப்பிட்டால் ருசியான இருக்கும்.