விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம்- ஜெகன் மோகன் ரெட்டி

 

விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம்- ஜெகன் மோகன் ரெட்டி

விசாகப்பட்டினத்தில் விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் இண்டஸ்ட்ரி என்னும் ரசாயன ஆலையில் இன்று காலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதில், அப்பகுதியில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆலையை சுற்றி இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆலையை சுற்றி கிட்டத்தட்ட 3 கி.மீ தூரத்துக்கு விஷவாயு பரவியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் இருக்கின்றனர். 

 gas leakage

இந்நிலையில் விஷ வாயு  தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.ஆந்திர அரசு எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி, அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 10லட்சம் ரூபாயும், ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலுதவி சிகிச்சை பெறுவோருக்கு 25ஆயிரம் ரூபாயும், விஷ வாயு கசிவால் பாதிப்படைந்துள்ள கிராம மக்களுக்கு  இழப்புக்கு ஏற்பட நிதியும் வழங்கப்படவுள்ளது. உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தலா 25ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.மேலும்,இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.