விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி: பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்!

 

விவசாயிகளுக்கு  6,000 ரூபாய் நிதியுதவி: பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார்!

பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.

சென்னை: பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ரயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் 12 கோடி சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமர் கிசான் சம்மன் என்ற இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில்  மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார். காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் அவர் கலைவாணர் அரங்கில்  விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் முதல் தவணைக்கான நிதி பயனாளர்களுக்கு வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதையடுத்து  தெற்கு ரயில்வேயில் என்எல்சி சார்பில் 200 கழிப்பறைகளை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கும் அவர், கிண்டி ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால கட்டுமான பணிகளையும் துவக்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.