விலகாத கொரோனா பயம்…. ரூ.2.77 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,375 புள்ளிகள் வீழ்ச்சி..

 

விலகாத கொரோனா பயம்…. ரூ.2.77 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,375 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மேலும் இந்த தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் உலக பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் படுத்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை இன்று காலையில் சரிவு கண்டது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.

கொரோனா வைரஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் நெஸ்லே இந்தியா, டெக்மகிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேவேளையில் பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., டாடா ஸ்டீல், கோடக்மகிந்திரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

கச்சா எண்ணெய்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 934 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,347 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.109.74 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.77 லட்சம் கோடியை இழந்தனர்.

மும்பை பங்குச் சந்தை

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,375.27 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 28,440.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 379.15 புள்ளிகள் சரிந்து 8,281.10 புள்ளிகளில் முடிவுற்றது.