விராட் கோலி பேட்டிங்கை மட்டுமே இந்திய அணி நம்பியிருப்பது சரியல்ல – கபில்தேவ் கருத்து

 

விராட் கோலி பேட்டிங்கை மட்டுமே இந்திய அணி நம்பியிருப்பது சரியல்ல – கபில்தேவ் கருத்து

டெல்லி: விராட் கோலியை நம்பியே இந்திய அணி இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையேயான டி20தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும்ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. அதன்படி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 3-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

 

இந்நிலையில்இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுதாம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதோடுடெஸ்ட் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், “விராட் கோலியை மட்டுமே நம்பி இந்திய அணி இருக்கிறது. கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். ஒருவரை மட்டுமே அணி நம்பி இருக்கக்கூடாது. எல்லோரும் இணைந்து ஆட வேண்டும்.

விராட்கோலி முக்கியமான வீரர் ஆவார். ஒரு வீரரை நம்பி இருக்கும் போது அணிக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. கூட்டாக விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியை விட அவர்கள் நன்றாக ஆடுவார்கள். இருந்தாலும் இங்கிலாந்தை விட இந்திய அணி சிறப்பானதாகவே இருக்கிறது. தவறுகளில் இருந்து பாடம் கற்பது முக்கியமானது. நாம் சிறந்த நிலையை அடைய வேண்டுமானால் அடிக்கடி தவறுகள் செய்யக்கூடாது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணி மீண்டும் எழுச்சி பெற இந்திய வீரர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பினர்” என்று கூறினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.