விபத்தில் சிக்கியவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த நர்ஸ்; கணவர் என தெரிந்ததும் கதறி அழுத பரிதாபம்

 

விபத்தில் சிக்கியவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த நர்ஸ்; கணவர் என தெரிந்ததும் கதறி அழுத பரிதாபம்

விபத்தில் சிக்கியவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், பின்னர் அவர் தமது கணவர் என தெரிய வந்ததும் கதறி அழுத சம்பவம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலம்: விபத்தில் சிக்கியவர் கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், பின்னர் அவர் தமது கணவர் என தெரிய வந்ததும் கதறி அழுத சம்பவம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி சீராமணியூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (51). இவரது மனைவி சிவகாமி ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.

திமுக மாவட்ட நிர்வாகியான சீனிவாசன், தனது சகோதரியை புளியம்பட்டியில் விட்டு விட்டு இரு சக்கர வாகனத்தில் மேச்சேரிக்கு திரும்பி கொண்டு இருந்தார். வரும் வழியில் பச்சனம்பட்டி அருகே வந்த போது சாலையோரம் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் இருந்து வந்த கார் அவரது இரு சக்கர வாகனத்தில் மோடி சீனிவாசன் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மீட்கப்பட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனிடையே, வழக்கம் போல் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிவகாமி பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, விபத்தில் சிக்கி அங்கு கொண்டுவரப்பட்ட சீனிவாசனுக்கு மருத்துவர்கள் மற்றும் சிவகாமி உள்ளிட்ட செவிலியர்கள் சிகிச்ச்சை அளித்தனர். விபத்தில் சிக்கியவரின் உடலில் இருந்த ரத்த கறையை அகற்றும் பணியில் சிவகாமி ஈடுபட்டிருந்தார்.

அப்போது விபத்தில் சிக்கியவரின் விரலில் திமுக சின்னம் பொறிக்கப்பட்ட மோதிரம் இருப்பதை கண்டு சிவகாமி திடுக்கிட்டார். அது தன்னுடைய கணவரது மோதிரம் போல் இருக்கிறது என சந்தேகம் கொண்ட சிவகாமி, விபத்தில் சிக்கியவரின் தலையில் பலத்த காயம் அடைந்து இருந்ததால் அவரது தலையில் சுற்றி இருந்த துணிகளை அகற்றி முகத்தை பார்த்தார். அப்போது தான் விபத்தில் சிக்கியவர் தனது கணவர் என சிவகாமிக்கு தெரியவந்துள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்க, சிவகாமி தனது கணவரை கட்டிப் பிடித்து கதறி அழுதார். இச்சம்பவம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியதுடன், அங்கிருந்த அனைவரும் கண்கலங்கினர்.

இதனிடையே, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.