விஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்: அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்த வருமான வரித்துறை!
அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணத்தை குறித்து பதிலளித்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்கள்,அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகம் என 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். குறிப்பாக வருமான வரித்துறையினர் மூன்றுநாட்களாக பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை, மதுரை வீடு, அலுவலகங்கள் மற்றும் விஜய் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதில் 300 கோடி ரூபாய் பிகில் வசூலில் 77 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டது. அதேபோல் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஏராளமான சொத்து ஆவணங்கள், பின்தேதியிட்ட காசோலை ஆகியவையும் கைப்பற்றப்பட்டன என மத்திய நேரடிகள் வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்த நிலையில் அங்கு சென்ற வருமான வரித்துறையினர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். 23 மணிநேரம் விஜய் வீட்டில் நடந்த சோதனை முடிவடைந்து விஜய் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதையடுத்து நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து நடிகர் விஜய்யின் ஆடிட்டர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டர் , அர்ச்சனா கல்பாத்தி என சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணத்தை குறித்து பதிலளித்தனர்.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் ஏஜிஎஸ் குழுமம், அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் ஒப்படைத்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதா என்று விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது உறுதிசெய்யப்பட்ட பின்னர் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.