விஜயகாந்த் எப்போது சென்னை திரும்புகிறார்? – தேமுதிக அறிவிப்பு

 

விஜயகாந்த் எப்போது சென்னை திரும்புகிறார்? – தேமுதிக அறிவிப்பு

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் எப்போது சென்னை திரும்புவார் என்பது குறித்து தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது

சென்னை: சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் எப்போது சென்னை திரும்புவார் என்பது குறித்து தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உடல் நலம் குன்றிய நிலையில் அவ்வப்போது சிகிச்சைக்காக  வெளிநாடு சென்று  வருவது வழக்கம். திமுக தலைவர் கருணாநிதி மறைவின் போது கூட அவர் வெளிநாட்டில் இருந்ததால் நேரில் வரமுடியாமல் கண்ணீர் அஞ்சலி செலுத்திய வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சிகிச்சை முடிந்த பின்பு சென்னை திரும்பியதும் நேராக மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று  மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நேரம் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் மிகவும் பொறுமையாக மனைவியின் துணையுடன் நடந்த காட்சிகள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து, இரண்டாம் கட்ட உயர் சிகிச்சைகாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி விஜயகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன்  அவரது  மனைவி பிரேமலதா,  அவரது 2-வது  மகன்  சண்முக  பாண்டியன்  ஆகியோர் உடன் சென்றனர். சுமார் ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்து விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் விஜயகாந்த் சென்னை திரும்புவார் என தேமுதிக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், விஜயகாந்தின் இந்த வருகை அக்கட்சித் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் தேதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எல்.கே.சுதீஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.