வாழ்வில் ஜெயத்தினை வழங்கும் மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்!
காரமடை அருகே உள்ள மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதால் ஏற்படும் சகல விதமான நன்மைகள் பற்றியும் அக்கோயிலின் அற்புதங்கள் பற்றியும் பார்போம்.
கோவை :
காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் அமைந்துள்ளது .இக்கோயிலில் உள்ள மூலவர் அனுமந்தராயசாமி ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தருகிறார்.
இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வந்தால் பக்தர்களின் சகல விதமான கோரிக்கைகளும் நிறைவேறுவதால் இத்தலத்து அனுமந்தராயசாமி அப்பகுதி மக்கள் இடையே மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறார்.
இக்கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயரை மனமுறுகி வேண்டுவதால் வழக்குகளில் வெற்றி பெறுவதாகவும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதாகவும்,உடல்நிலை சரி இல்லாதவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாகவும், திருமணம் ஆகாத இளம் வயதினருக்கு திருமணம் விரைவில் கைகூடுவதாகவும் அது மட்டுமல்லாது நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இடையே நிலவி வருகின்றது.
இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாத மூல நட்சத்திர நாளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெறுகின்றது.
மேலும் அன்றைய தினத்தில் அஞ்சனை மைந்தனுக்கு வெண்ணெய் சார்த்தியோ, வெற்றிலை மாலை அணிவித்தோ, துளசி மாலை சார்த்தியோ வழிபாடு செய்து வந்தால் உங்களது வாழ்வில் சகல நன்மைகளையும் பெறலாம்.
இத்தலத்தில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை அன்றும் சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெறுகிறது.
இதனைஅடுத்து அன்றைய தினம் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு வியாழக்கிழமை நாட்களிலும் காலை எட்டு மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
உங்களது ஜென்ம நட்சத்திர நாளில் இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அல்லது வடைமாலை சாற்றி வழிபாடு செய்வதால் உங்களது வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெறலாம் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.