வாரணாசியில் மோடி இன்று வேட்புமனு தாக்கல் !
பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.
மத்தியில் ஆளும் மோடி அரசு ஜூன் 3-ம் தேதி சட்ட ரீதியாக முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.
அதன் படி வாரணாசியில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மோடி, ‘வாரணாசி தொகுதி மக்களுக்குக் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டதாக தம்மால் கூற முடியாது. ஆனால் அதற்கான முயற்சிகள் கண்டிப்பாக எடுக்கப்பட்டது’ என்றார்.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் மோடி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக காலை 9.30 மணிக்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி, அதன்பின் 11 மணிக்கு கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். அதன்பின் சரியாக 11.30 மணிக்கு வேட்புமனுவைப் பிரதமர் மோடி தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: வரவர மாமியார் கழுத போல தேய்ஞ்சாலாம்; இது என்னடா காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை!