வாடகை காரில் ரகசியமாக வந்த அமைச்சர்; சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை

 

வாடகை காரில் ரகசியமாக வந்த அமைச்சர்; சிபிஐ கிடுக்கிப்பிடி விசாரணை

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்

சென்னை: குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

gutkha

இதனைத் தொடர்ந்து, குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குட்கா லஞ்ச வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ கடந்த வாரம் சம்மன் அனுப்பியது. அதன்படி, ஆஜரான விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இரண்டு நாட்களாக விளக்கமளித்தார்.

vijayabhaskar

அதேபோல், சிபிஐ அனுப்பிய சம்மனின் பேரில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவும் விசாரணைக்கு இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், கடந்த செப்டம்பரில் அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

vijayabhaskar

ஆனால், கஜா புயல் நிவாரண பணிகளில் இருந்த காரணத்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் இருந்தார். அவர் ஆஜராவதற்கு இறுதி கெடு விதிக்கப்பட்டது. அதன்படி, விஜயபாஸ்கர் இன்று ஆஜரானார். எனினும், அவர் ஆஜரானது குறித்த விவரங்கள் வெளிவராமல் இருந்தன.

இந்நிலையில், சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாடகை காரில் ரகசியமாக வந்ததாகவும், அவரிடம் சுமார் சுமார் 6 மணி நேரத்க்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை நேரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது, சரவணன் லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டதாகவும், ஆனால், அமைச்சரோ அதற்கு மறுப்பு தெரிவித்து சரவணன் யார் என்றே தனக்கு தெரியாது என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.