வாஜ்பாய் பண்பட்டவர்! மோடி திறமையானவர்! சொன்னது தேசியவாத காங்கிரஸ் தலைவர்

 

வாஜ்பாய் பண்பட்டவர்! மோடி திறமையானவர்! சொன்னது தேசியவாத காங்கிரஸ் தலைவர்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பண்பட்டவர். மோடி திறமையானவர் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சமீபத்தில் அளித்த பேட்டியில் வாஜ்பாய், மோடி மற்றும் மகாராஷ்டிரா நிலவரம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வாஜ்பாய் மிகவும் பண்பட்ட நல்ல மனிதர். திட்டத்தை செய்து முடிக்க வேண்டும் என்று வரும் போது மோடி மிகவும் திறமையான நபர். ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்து விட்டால் ஈவுஇரக்கமில்லாமல் மோடி செய்து முடித்து விடுவார்.

மோடி

வாஜ்பாய் எந்த முடிவுகளை எடுத்தாலும் அது மற்றவர்களுக்கு கசப்பை ஏற்படுத்தி விட விடாது என நினைப்பார். மக்கள் அவரை அதிகம் மதித்தனர். ஆனால் முடிவு சார்ந்த வேலைகளில் மோடி அவரிடமிருந்து வேறுபட்டிருக்கலாம். மகாராஷ்டிரா விவசாயிகள் அமைதியற்ற, ஏமாற்ற மற்றும் கோபமான மனநிலையில் உள்ளனர். பெரிய அளவில் தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

சரத் பவார்

3 ஷிப்ட் இயங்கிய நிறுவனங்கள் தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்குகிறது. இது போன்று நிலைமை பெரியதாக இருக்கும் போது மாநில தலைமை முன்முயற்சிகளை எடுத்து தீர்வுகளை காண வேண்டும். ஆனால் இந்த முயற்சிகளில் தற்போதைய முதல்வரின் பங்களிப்பை நான் காணவில்லை. விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து வருகின்றனர். பிரச்னை பெரிதாகி வெடிக்கும்போது முந்தைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசை பட்னாவிஸ் குற்றம் சொல்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.