வளர்த்து விட்டவர்களை எட்டி உதைத்த ரஜினி …அரசியல்வாதி ஆகும் முன்னே காட்டும் அலட்சியம்!
உச்சத்தை அடைய உதவிய ஏணியை எட்டி உதைப்பது போலவே பார்க்கப்படுகிறது.
2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி தலைமையில் கடந்த 5 ஆம் தேதி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து ரஜினிகாந்த் இன்று காலை 10 மணிக்கு எம்.ஆர்.சி நகரிலுள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். அதில் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் லீலா பேலஸில் தேசிய ஊடகங்கள், மற்றும் முக்கியமான அரசியல் சார்ந்த ஊடகங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறதாம். சினிமா மற்றும் இணையதள ஊடகங்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் இடம் இல்லையாம்.
ரஜினி 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது முதல் தற்போது அண்ணாத்த வரை சுமார் 45 ஆண்டு சினிமா வாழ்க்கையில் அவரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியவர்கள் சினிமா நிருபர்களும் சினிமா செய்திகளும் தான். ரஜினி சினிமாவை விட்டு இன்னும் விலகவும் இல்லை. அரசியலில் நுழைந்தால் கூட சினிமாவில் தொடர்ந்து இருப்பார் என்றே சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது சினிமாவில் ரஜினி ஒரு நிலையான இடத்தை பிடிக்க உறுதுணையாக இருந்த சினிமா நிருபர்களை அவர் செய்தியாளர் சந்திப்பில் அனுமதிக்காதது உச்சத்தை அடைய உதவிய ஏணியை எட்டி உதைப்பது போலவே பார்க்கப்படுகிறது.
அரசியல் வாதியாக மாறுவதற்கு முன்பே தனது பகட்டு போக்கை காட்ட ஆரம்பித்து விட்டாரோ ரஜினி என்று புலம்பிய படி செல்கிறார்கள் சம்பவ இடத்தில் இருந்த சில பத்திரிகை நண்பர்கள்…