வலுக்கும் ராதாரவி – சின்மயி மோதல்: ராதாரவிக்கு ‘டத்தோ’ பட்டம் கொடுக்கவே இல்லை; உண்மையை உடைத்த சின்மயி
நடிகர் ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் ‘டத்தோ’ பட்டமே பொய் என்று பாடகி சின்மயி குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை: நடிகர் ராதாரவி தனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் ‘டத்தோ’ பட்டமே பொய் என்று பாடகி சின்மயி குற்றச்சாட்டியுள்ளார்.
மீ டூ மூலம் பின்னணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது புகார் தெரிவித்ததிலிருந்து சின்மயியைப் பற்றி ராதாரவி விமர்சிப்பதும் அதற்கு சின்மயி பதிலடி கொடுப்பதும் வழக்கமானதாக இருந்து வருகிறது.இதையடுத்து சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டது ராதாரவி – சின்மயி மோதலுக்கு இன்னும் கூடுதல் வழி வகுத்துள்ளது.
இந்த நிலையில்தான், ராதாரவி தனது பெயருக்கு முன்னால் வைத்துக்கொள்கிற ‘டத்தோ’ பட்டம் பொய் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் சின்மயி.
இது குறித்து சின்மயி மலேசிய நாட்டின் மெலேகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் இருப்பதாவது:
மதிப்பிற்குரிய சின்மயி ஸ்ரீபதா.
நான் ஏற்கெனவே, மெலாகா அரசின் நிர்வாகத் துறையிடம் விளக்கம் கேட்டுவிட்டேன். அதன்படி ராதாரவி என்ற நடிகருக்கு அந்த மாநில அரசு எந்த விருதினையும் வழங்கவில்லை. அவரது பெயர் எங்களது அரசு ஆவணங்களில் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக் கானுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனெனில் ராதாரவி இந்தப் பட்டத்தை தனது பெயருக்கு முன்னால் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். மெலாகா அரசின் முதல்வர் யாக் தவுன் ஹாஜி அடி பின்னிடம் இது குறித்து புகார் தெரிவித்து இதன் மீது நடவடிக்கையோ அல்லது தீர்வோ எட்டப்படும். இதைப் பற்றி எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி.
பிரசாந்த் குமார் பிரகாசம்
மெலாகா முதல்வரின் பொது விவகாரத்துறைக்கான சிறப்புச் செயலர்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
However, my dear jimblippippiees on Instagram did some more sleuthing and I eventually wrote to the Chief Secretary Public Affairs of the Chief Minister of Melaka, from where Mr. Radha Ravi claims to have been awarded the title and I got this response. pic.twitter.com/jZqzjOYLw2
— Chinmayi Sripaada (@Chinmayi) November 29, 2018
இதை அம்பலப்படுத்தி மீண்டும் ராதாரவியை வம்புக்கிழுத்திருக்கிறார் சின்மயி. மலேசியாவில் வழங்கப்படும் ‘டத்தோ’ பட்டம் கவுரவமிக்கதாக கருதப்படுகிறது. முன்னதாக இந்திய அளவில் நடிகர்களில் ஷாருக் கானுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.