வலுக்கும் அதிமுக- பாஜக மோதல்: பொன்னாருக்கு தம்பிதுரை பதிலடி!

 

வலுக்கும் அதிமுக- பாஜக மோதல்: பொன்னாருக்கு தம்பிதுரை பதிலடி!

அதிமுக கட்சி காங்கிரஸிற்கு அடுத்ததாக  அதிக எம்.பிக்களை கொண்ட கட்சி என்பதால் தான்  மக்களவை துணை சபாநாயகர் பதவி அதிமுகவிற்கு வழங்கப்பட்டதாக தம்பிதுரை கூறியுள்ளார்.

சென்னை: அதிமுக கட்சி காங்கிரஸிற்கு அடுத்ததாக  அதிக எம்.பிக்களை கொண்ட கட்சி என்பதால் தான்  மக்களவை துணை சபாநாயகர் பதவி அதிமுகவிற்கு வழங்கப்பட்டதாக தம்பிதுரை கூறியுள்ளார்.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு நன்மை தரும் கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் எனத் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.  தமிழகத்தை பொருத்தவரை திமுக காங்கிரஸுடன் கூட்டணி என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முரணான கருத்துக்களை அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை கூறி வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க அதிமுக தோளில் சுமந்து செல்லாது என்று மக்களவை துணை சபாநாயகர்தம்பிதுரை காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் தம்பிதுரைக்கு அதிமுக கொடுத்துள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக வழங்கிய மக்களவை துணை சபாநாயகர் பதவியில் தம்பிதுரை ஏன் உள்ளார் எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, காங்கிரஸிற்கு அடுத்தபடியாக அதிக எம்.பிக்களை கொண்ட கட்சி என்பதின் அடிப்படையிலேயே மக்களவை துணை சபாநாயகர் பதவி அதிமுகவிற்கு வழங்கப்பட்டது. தாமாக முன்வந்து பாரதிய ஜனதா பதவியை அதிமுகவிற்கு வழங்கவில்லை. இது எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கவேண்டிய பதவி. காங்கிரஸிற்கு கொடுக்க வேண்டாததின் காரணமாக முறைப்படி அதிமுகவிற்கு கிடைத்தது’ என்றார்.